நெல்லை சீமையிலே
நயினார் குளக்கரையிலே
நாள்தோறும் மிதிவண்டியிலும்
நடைபோட்டும் சென்ற
நல்ல காலங்கள்
ஓடிவிட்டன
தார் அதிகநாள்
தங்காத மண் சாலை
தங்கமாய் மின்னும்
நெல்மணிகள் ஒருபுறம்
பெருங்கடலென அலையுடன்
பெருமையாய் நயினார்குளம்
மறுபுறம் அழகு சேர்க்கும்
சுழன்று அடிக்கும்
காற்றில் மிதிமிதியென
மிதிவண்டியை மிதித்து
நதியென ஓடோடி
பள்ளிக்கடலை அடைவோம்
சிறார்களாய் நாங்கள்
குளத்தருகே வெயிலுக்கு
குடை பிடித்தாற்போல்
அழகிய ஆலமரமுண்டு
அதனடியில் மாடன்
கோவிலும் உண்டு
அருகில் வயலில்
உழுது களைத்து
விழுதுகள் அருகில்
இளைப்பாறுவார்கள்
உழவர்கள் சிலர்
மாடனை உருகி
தொழுவார்கள் பலர்
இப்படி காட்சிகள்
பல காணலாம்
இன்றோ வயல்வெளிகள்
இருண்டு விட்டன
வீட்டுமனைகள் பெருக்கம்
கண்டு பயிர்களெல்லாம்
மருண்டு விட்டன
எமது நீரின சொந்தங்கள்
வீடுகளாம் அழகிய
வாய்க்கால்கள் எல்லாம்
வறண்டு விட்டன
கழிவுநீர் கால்வாய்களாய்
மாறி விட்டன
கரை புரண்டோடும்
தாமிரபரணி அன்னை
நவீன துச்சாதனர்களால்
மணலெனும் துகிலுரிக்கப்பட்டு
நாணி குறுகி நிற்கிறாள்
காப்பாற்ற கண்ணபிரான்
கதைகளில்தான் வருவாரோ ?
குளங்கள் அழிந்து
குடியிருப்புகளாய் மாறிவிட்டன
மழைக்காலங்களில்
நீர் புகுந்துவிட்டதென
நிவாரணம் கேட்கிறார்கள்
நெல்லுக்கு சிவபெருமான்
வேலிபோட்டதாக புராணம்
சொல்வதுண்டு இனிவரும்
காலங்களில் நெல்லுமில்லை
வேலியுமில்லை நீருமில்லை
வேனற்காலம் மட்டும்
வாட்டும் நிலை
வாராமல் தடுக்க
வாலிபர்களே உடனே
இயற்கையை சுரண்டுவதை
தடுக்க போராடுவோம் வாரீர் !
The following lines are really nice and true
ReplyDeleteகரை புரண்டோடும்
தாமிரபரணி அன்னை
நவீன துச்சாதனர்களால்
மணலெனும் துகிலுரிக்கப்பட்டு
நாணி குறுகி நிற்கிறாள்
காப்பாற்ற கண்ணபிரான்
கதைகளில்தான் வருவாரோ ?
குளங்கள் அழிந்து
குடியிருப்புகளாய் மாறிவிட்டன
மழைக்காலங்களில்
நீர் புகுந்துவிட்டதென
நிவாரணம் கேட்கிறார்கள்
see this link for a similar feelings www.godson-mindinmind.blogspot.com