Thursday 20 October 2011

தேகமும் மேகமும்

மோகத்தை கொன்று
தேகத்தை வென்ற
வேகத்தில் நான்
மேகத்தை பார்த்தேன்
மேகம் சொன்னது
"ஓ மனிதனே
உனது தேகமும்
என்னைபோன்றது
கடலிலிருந்து
நீராவியாய் எழுந்து
மேகமானேன்
மலைகளையும்
பள்ளத்தாக்குகளையும்
கடந்து தென்றல்
தழுவியதும் மீண்டும்
மழையாய் மாறி
கடலில் கலக்கிறேன்
நீயும் இவ்வுலகில்
பரமாத்மாவிடம்
இருந்து தேகத்தில்
ஆவியாய் இணைந்து
இன்ப துன்பங்கள்
வெற்றிதோல்விகள்
ஆகிய மலைகளையும்
பள்ளத்தாக்குகளையும்
கடந்து மரணத்தை
தழுவியதும்
ஆன்மா கடவுளை
மீண்டும் அடைகிறது"
மனது சாந்தமானது
உலகில் உள்ள
உயிர்கள் உள்ளே
உறைந்திருப்பது
பரம்பொருளே!

Wednesday 19 October 2011

குழந்தை தொழிலாளர்கள்

சிரித்து மகிழ்ந்து
சிந்தை தெளிந்து
பள்ளி செல்லும்
பாங்கை மறந்து
செல்ல சிறார்கள்
செய்கிறார்கள் பணி
செல்லும் இடமெல்லாம்

கண்கள் குளமாகி
மனது ரணமாகி
இதயம் கணமானது
இதை தடுக்க
சட்டங்கள் போட்டும் 
சரிவரவில்லை
திட்டங்கள் போடும்
அரசாங்கம் பிள்ளைகள்
பட்டங்கள் வாங்க
வழி செய்ய வேண்டும்

வறுமை அருகி
வளங்கள் பெருகி
நலங்கள் பெற்று
நாளும் பிள்ளைகள்
பள்ளிகள் சென்று
பாங்குடன் படித்திட
பங்காற்றுவோம்
பணிவன்புடன்

Monday 17 October 2011

பாரதி

கடையத்தில் கண்டேன்
பாரதி வாழ்ந்த வீட்டை
தடையேதும் இல்லாது
கவிதை மழை பொழிய
குடையேதும் இல்லாது
மக்கள் அதில் நனைய
சொற்கள் அருவியாய்
என் மனதில் கொட்டிட
கடைக்கோடி அடியேன்
தொழுதேன் கண்ணீர்
மல்க

பாரதியே நீ கவிதைகளை
காகிதத்தில் எழுதவில்லை
அன்பெனும் எழுதுகோலால்
அறிவெனும் மைகொண்டு
அண்டசராசரங்களில்
பதித்திருகிறாய் அதனால்
காலத்தையும் கடந்து
இளமையாய் ஒளிர்கிறது
உனது படைப்புகள்

Tuesday 11 October 2011

நினைவுகள்

என்னவளே உனது
நினைவுகள் எனது
மனதில் ஓயாது
கடலலையாய்....
உடலைவிட்டு ஆவி
பிரிந்தாலும் மீண்டும்
மழையாய் மாறி
எண்ணக்கடலில்
உனது நினைவுகளில்
மூழ்குவேன்